“ பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சாதாரண பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை உருவாகும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தகையோடு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜனாதிபதித் தேர்தலில் வென்ற கட்சியே நாடாளுமன்ற தேர்தலிலும் வென்றுள்ளது. அந்தவகையில் வருகின்ற பொதுத்தேர்தலில் எவ்வித தடையுமின்றி சாதாரண பெரும்பான்மையை பெறுவதற்குரிய வாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கு உள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெற வேண்டும், அவ்வாறு அல்லாவிட்டால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை ஏற்படக்கூடும்.
அதேபோல அக்கட்சியினருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கிடைக்கப்பெறக்கூடாது. இலங்கை வரலாற்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களில் கட்சிகள் அரசாங்கத்தையும் இல்லாது செய்து, நாட்டையும் நாசமாக்கியுள்ளன.
1977 ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி, 2010 இல் மஹிந்த ஆட்சி மற்றும் 2020 கோட்டா ஆட்சியில் இது நடந்துள்ளது.” – என்றார்.