இன்றைய நவீன உலகில் எல்லா துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன. தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வீட்டில் இருந்தவாறே ‘ஒன்லைன்’ ஊடாக பல விடயங்களை செய்ய முடிகின்றது. இப்படி தொழில்நுட்ப வளர்ச்சியில் சாதகமான பல விடயங்கள் உள்ளன.

இந்த நம்பிக்கையில் நூதன முறையில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களில் பலர் சிக்கிவிடுகின்றனர். மீன்பிடிப்பதற்கு தூண்டில் போடப்படுவதுபோல, எமது தகவல்களையும், தரவுகளையும் திரட்டுவதற்கு இணையத்தில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அதற்காக பல ‘எப்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, விழிப்பாகவே இருங்கள்.

உங்களுக்கு ‘லாட்டரி’ விழுந்துள்ளது, ‘பரிசு பொதி’ கிடைத்துள்ளது, அந்த நிறுவனத்தின் வெற்றியாளராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள், இந்த நிதியத்தில் இருந்து உங்களுக்கு நிதி வங்துள்ளது என்றெல்லாம் உங்கள் தொலைபேசி, மெயில் உள்ளிட்டவற்றுக்கு வரும் தகவல்கள் மற்றும் அழைப்புகள் பற்றி விழிப்பாக இருங்கள். சிந்தித்து செயற்படுங்கள்.
ஏனெனில் அவ்வாறு வரும் அழைப்புகள் மற்றும் தகவல்களை நம்பி பல லட்சங்களை இழந்தவர்கள் இருக்கின்றனர். இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதும் காவல்துறைக்கு கடினமான செயலாக உள்ளது.
இப்படியானதொரு வலையில் விழுந்து சுமார் 5 லட்சம் ரூபாவை இழந்துள்ளார் மலையக பெண்ணொருவர்.
தனக்கு நேர்ந்த அவலம்போன்று, பிறருக்கு நேரக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் எம்மிடம் தகவல்கள் பகிர்ந்துகொண்டார். அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படும், மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என அவர் நம்புகின்றார்.
லண்டனில் இருந்து அழைப்பொன்று வந்துள்ளது. நம்பிக்கை தரும் வகையில் கதைத்துள்ளனர். ஈமெயில்கள் அனுப்பட்டுள்ளன. இவ்வளவு தொகை வைப்பிலிட்டால் ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக நம்பக்கூடிய வகையில் நூதனமுறையிலேயே தொடர்பாடல் கையாளப்பட்டுள்ளது.
நால்வரின் வங்கி கணக்கிலக்கம் அனுப்பட்டுள்ளன. தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அடகு வைத்து சுமார் 5 லட்சம்வரை வைப்பிலிட்டுள்ளார். இன்னும் 7 லட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், இரு நாட்கள் காத்திருந்துள்ளார். அதன் பின்னர் அழைப்பு வரவே இல்லையாம். தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டில் தொழில் புரிபவர்களின் குடும்பங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. அண்மையில்கூட நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சுமார் 7 லட்சம் ரூபாவரை இழந்துள்ளார்.
விழிப்பாக இருப்போம்.
www.kuruvi.lk










