மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் இன்று நடைபெற்றது.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின்பேரில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கொட்டகலைக்கு வந்து, இச்சந்திப்பில் பங்கேற்றார் என அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு ஏற்கனவே உரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இதற்கான திட்டங்களை இறுதிப்படுத்துவதற்கான சந்திப்பாகவே இது அமைந்தது.
இதன்படி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும் மேலதிக இடம் தேவையெனில் அதனை பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பல்லைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாட திட்டங்கள் பற்றியும் இச்சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தவிசாளர் பி. இராஜதுரை, உப தலைவர்களான பிலிப்குமார், எம்.சச்சிதானந்தன், நுவரெலியா, கொட்டகலை, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகளுக்கான முன்னாள் தவிசாளர்கள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், பிரத்யேக உதவியாளர் தயாளன் குமாரசுவாமி, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.ரூபதர்ஷன், நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர், கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.










