புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மலையக தமிழர்களின் சார்பில் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
”புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரும் அரசாங்கத்தின் செயற்பாட்டை சாதகமாக பார்க்கின்றேன். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மலையகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி இல்லை. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். வடக்கு, கிழக்கு சார்ந்த ஒரு தமிழ் பிரதிநிதியும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் குழுவில் உள்ளனர்.
வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மலையக பிரதிநிதியொருவர் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.