நாட்டை பிளவுபடுத்துவதற்கு எஞ்சியுள்ள ஒரே வழி மாகாணசபை முறைமையாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசு நடத்தவேகூடாது.” – என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியாவும், மேற்குலகமும் ஜெனிவாத் தொடரில் வலியுறுத்திவருகின்றன. மேற்படி அழுத்தங்களுக்கு அரசு அடிபணியக்கூடாது. மாறாக இந்தியாவையும், மேற்குலகையும் திருப்திப்படுத்துவதற்காக தேர்தல் நடத்தப்படுமானால் பாரிய விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும்.
தற்போதைய மாகாணசபை முறைமை என்பது நிர்வாக ரீதியில் வெள்ளை யானையாகும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு எஞ்சியுள்ள வழியாகவும் அது அமைந்துள்ளது. எனவே, அத்தகைய முறைமைக்கு அரசு உயிர் கொடுக்க முற்படக்கூடாது.
புதிய அரசமைப்பு ஊடாக அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்டு, பிரிவினைவாத சிந்தனைகள், கோட்பாடுகளை தடைசெய்துவிட்டு வேண்டுமானால் அந்த அபிவிருத்தி சபைகளுக்கு அரசு தேர்தலை நடத்தலாம். அதற்கு முன்னர் நடத்தக்கூடாது. 13ஆவது திருத்தச்சட்டமும் எமது நாட்டுக்கு அவசியம் இல்லை.” – என்றார்.










