அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. எனவே, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்கமாட்டோம் – என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகிவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மாகாணசபை முறையால் நாட்டுக்கு பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. அம்முறைமை இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவேதான் 13 ஐ நீக்குமாறும், புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றோம்.
தேசிய அமைப்புகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் ,அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசு நடத்தக்கூடாது.
மாகாண சபைகள் இன்றி நாடு சிறப்பாக செயற்படுகின்றது .எனவே, அவற்றுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு அரசு முயற்சிக்ககூடாது. அதற்கு நாம் இடமும் அளிக்க மாட்டோம். “ – என்றார்.










