வரும் மாகாண சபைத் தேர்தலின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தான் விரும்புகின்றார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“மாகாண சபைத் தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட நான் விரும்புகின்றேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் ஆட்சியமைக்க முடியும் என்ற பலமான நம்பிக்கை எமக்கு உள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு அவசியமாகும்.
தற்போதைய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி., நாட்டை ஒரு கட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் காணப்படுகின்றது. நாம் சோசலிசக் கொள்கைகளை ஆதரிக்கின்ற போதிலும், ஒரு கட்சி ஆட்சியை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் ஜே.வி.பி. பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியானது, பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையிழப்பைப் பிரதிபலிக்கின்றது. இருப்பினும், வடக்கு – கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும்.” – என்று சுமந்திரன் கூறியுள்ளார்.










