யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளனர்.
அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. பின்னர் வருகை தந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
அதனால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு 9 மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.
