“வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகின்றேன்.”
– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டைப் பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள வெடிக்கக்கூடும்.
சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கைப் பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை. உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள்.
ஆனால், இந்தத் தேர்தலில் பல பேர் போட்டியிடுகின்றார்கள் என்று கூறினாலும் ரணில், சஜித், அநுர என்ற மூன்று பேர்தான் முக்கியமானவர்கள். இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்கப் போகின்றது.?
இந்தத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகின்றேன்.
அதாவது தெற்கிலே இருக்கின்ற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜே.வி.பி. கட்சிக்குப் போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவுக்கு இந்த நாட்டுக்கு அவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது.
குறிப்பாக இந்த நாட்டை அவர்கள் சூறையாடி இருக்கின்றார்கள், போர், போர் என்று போரின் காரணமாகத் தங்களைத் தாங்கள் அவர்கள் வளர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் மக்களுக்கு இப்போது நன்றாகத் தெரியும்.
ஆகவே, எந்தவிதத்திலும் தற்போது இருக்கின்ற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால், தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர்.
ஆனாலும், அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.
இப்போது மொட்டுக் கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்துக் காட்டி வேறொரு வேட்பாளரைப் போடக்கூடும். ஆனால், அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோநிலையில் இருப்பார்கள் என்றுதான் நான் நம்புகின்றேன்.
எனினும், முழுமையாக ரணிலிடம் தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனால் இறந்துகொண்டு போறவன் எப்படியாவது வைக்கோலைப் பிடிக்கின்ற மாதிரி ஏதாவது ஒன்றைச் சொல்லி தாங்கள் இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கின்றோம் என்று காட்டுவதற்குப் பலதும் பேசுவார்கள்.
இப்போது அரசோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன். ஏனெனில் ராஜபக்சக்களோடு இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் அதன் பின்னர் நாடாளுமன்றம் போகக் கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும்.” – என்றார்.
