யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது: இரு முச்சக்கரவண்டிகளும் மீட்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இரவு வேளையில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த மூவரே யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.

இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் ஏற்பட்டநிலையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இது தொடர்பில் விரைந்து செயற்பட பொலிஸாரிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில் குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles