கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இலங்கையில் அமையப்பெற்ற ஒரு கோட்டை சாட்சிப்பதிவாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய கடற்பகுதியில் சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ளது அம்மன்னீல்கோட்டை. பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான மிக முக்கிய கடல்வழிப்பாதையாக இது அமைந்துள்ளது.
எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அரணாக அம்மன்னீல் கோட்டை போர்த்துகேயர்களால் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. 1620 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பின்னர் இக்கோட்டை அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இன்று மிக அழகான சுற்றுலாத்தலமாக காட்சித்தரும் இந்த கோட்டை இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்தவரை ஒரு துயரச்சின்னம் என்பது நம்மில் பலர் அறியாத உண்மை.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலி தொழில்களுக்காக வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் பாக்கு நீரிணை வழியாக வந்து இறங்கிய இடம் தான் அம்மன்னீல் கோட்டை.
இங்கேதான் நாட்டுக்குள் நுழையத் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். வெகு தூரம் கடல் பயணம் செய்து நொந்து போயிருந்த இவர்கள் பல நோய்களால் பீடிக்கப்பட்டார்கள்.
அம்மை, கொலரா போன்ற நோய்களுக்கு ஆட்பட்டார்கள். இந்த நோய்கள் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் இருக்க நோயுற்றவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். அதாவது நோயுற்றவர்கள் அம்மன்னீல் கோட்டையின் இருண்ட அறைகளில் அடைக்கப்பட்டனர். நோயுற்ற தம் உறவுகளை அங்கேயே விட்டுவிட்டு கண்ணீரோடும் ஆற்றாமையோடும் மற்றவர்கள் மலையகம் நோக்கி பயணம் செய்தார்கள்.
நோயுற்றவர்களுக்கு இங்கே சிகிச்சை வழங்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். சிகிச்சை எதுவும் கிடையாது. தனிமையிலும் நோயிலும் வாடும் இவர்கள் தானாக குணமடைந்தால் மட்டுமே உறவுகளுடன் வந்து சேர்ந்து வாழ முடியும் இல்லையென்றால் அந்த சிறைக்குள்ளேயே இறந்துவிடவேண்டியதுதான்.
இப்படி மனிதாபிமானமின்றி நடத்தப்பட்ட நம்மவர்கள் பட்ட துயரங்களை அங்குள்ள சுவர்களுக்கு கூட வாயிருந்தால் சொல்லும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்தக்கோட்டை தற்போது ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
தகவல் – உதயசூரியன்