‘ ரணில் அரசாங்கம் சர்வதேச ஆதரவை இழக்கும் அபாயம்’ – சஜித் சுட்டிக்காட்டு

“மின்சாரக் கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மின்சார பாவனையாளர் சங்கத்தின் விசேட சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களின் வாழ்வுரிமையைப் போன்று பாவனையாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் முன்நிற்கின்றோம்.

நாட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடைபெற்றது. வீதியில் போராட்டம் நடத்துவது கூட பயங்கரவாதச் செயலாக கருதப்படுகின்ற காலகட்டமாக இருக்கின்றது.

கூட்டங்கள், அமைதியான போராட்டம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் ஆகியவை அரசமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாட்டு மக்களை மிகப்பெரிய ஆபத்தில் தள்ளும் பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பில் சர்வதேச சமூகம் மற்றும் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் சர்வதேச நிவாரணங்கள் கூட கிடைக்காமல் போகலாம். இதனால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

அரசு அப்பட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீறி அடிப்படை உரிமைகளையும் மீறுகின்றது” – என்றார்.

Related Articles

Latest Articles