விகாரை உண்டியலை உடைத்து கொள்ளையிட்ட தம்பதியினருக்கு மறியல்!

எல்ல விகாரையின் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற தம்பதிகளை எல்ல பொலிஸார் கைது செய்து, இன்று பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி அவ்விருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

விகாரை உண்டியல் உடைக்கப்பட்டமை குறித்து, விகாரையின் தலைமைப் பிக்கு, எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இம் முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் பேரில், சந்தேகத்தின் பேரில் பொலிசார் தம்பதிகள் இருவரைக் கைது செய்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்த பதின்மூன்றாயிரத்து இருபது ரூபா பணத்தையும் மீட்டனர்.
தம்பதிகள் இருவர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட வேளையில், விகாரையில் உண்டியல் உடைத்தமையையும், பொலிசாரினால் மீட்கப்பட்ட பணம் உண்டியலில் திருடிய பணம் என்பதையும், அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அவ்விருவரும், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும், நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன தம்பதிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

எம். செல்வராஜா, பதுளை.

Related Articles

Latest Articles