அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்துக்கு தெரிவிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாசு சோதனை பிரிவு, சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் மாசு கசிவு குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக DMT பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், 40%க்கும் அதிகமான பஸ்கள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்தன. பழுதடைந்த வாகனங்களை 14 நாட்களுக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய வாகனங்களின் வருவாய் உரிமம் பறிக்கப்படும்.
அத்துடன் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளைத் தொடர்ந்து புகையை வெளியிடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“வேரஹெர அலுவலகத்துக்கு வராத மாசு உமிழ்வு சோதனையில் தோல்வியடைந்த வாகனங்களுக்கு முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் நினைவூட்டலை மதிக்காத பட்சத்தில் இரண்டாவது நினைவூட்டல் வெளியிடப்படும். பின்னர் உரிமங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
