இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவின் சித்திரை புத்தாண்டு வருமானம் ஒரு கோடியை தாண்டியதாக ஹட்டன் டிப்போவின் சிரேஷ்ட பரிசோதகர் தெரிவித்தார்.
புத்தாண்டு முன்னிட்டு சித்திரை வீடு திரும்பியர்வர்கள் மீண்டும் வீடு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சித்திரை புத்தாண்டுக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்த 12,13,14 ஆகிய திகதிகளில் ஹட்டனை நோக்கி வருகை தந்தனர். இதனால் இந்த தினங்களில் ஹட்டன் டிப்போவின் வருமானம் ஒரு கோடியை தாண்டியுள்ளது.
அதே போன்று இன்றைய தினமும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் தொழிலுக்காக கொழும்பு நோக்கி செல்வதற்கு ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினை நோக்கி வருகை தந்துள்ளனர். அவர்கள் சிரமமின்றி செல்வதற்கு நாங்கள் சாரதிகளையும் நடத்துனர்களையும் தொலைபேசி அழைப்பின் ஊடாக அழைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
எனினும் எமது டிப்போவில் ஊழியர்களின் குறைபாடு காரணமாக உடனுக்குடன் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்பட முடியாத நிலையில் இருக்கிறோம். காரணம் எமது டிப்போவில் பணிபுரியும் பெரும் பாலான ஊழியர்கள் சாரதிகள், நடத்துனர்கள், அனைவரும் தூர பிரதேசங்களிலிருந்து தான் வர வேண்டும். அவர்கள் மாதத்திற்கு ஒரு தடைவையே வீடு செல்கின்றனர். இப்போது சித்திரை புத்தாண்டுக்கு சென்றுள்ளதால் அவர்கள் வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இருக்காது. ஆகவே தான் எங்களுக்கு அடிக்கடி பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
