நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிருத்தி குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
நுவரெலியா பீட்று தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டத்திற்கான இடம் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் நுவரெலியா மாவட்ட நகர அபிருத்தி அதிகாரிகளினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இன்றைய தினம் அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதுதொடர்பாக விரிவாக கலந்துரையாடி தீர்வு எட்டப்பட்டது.
ஹட்டன், டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்ம கழிவுகளை அகற்றுவதில் ஏற்பட்டு வந்த பிரச்சினை தொடர்பாக அபிருத்தி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஹட்டன், டிக்கோயா நகரசபையினால் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டகலை பிரதேச சபை கழிவு அகற்றும் பகுதியில் அகற்றுமாறு கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் ஹட்டன் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிகூட்டு கோபுரத்தை நவீனமயப்படுத்தி புதிதாக நிர்மாணிக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் டிக்கோயா,நகரசபை செயலாளருக்கு பணிப்புரைவிடுத்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் பியதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்துக்கொண்டனர்.
எஸ். சதீஸ்










