அசாத் சாலியின் மனு தொடர்பில் மார்ச் 23 இல் நீதிமன்றம் தீர்மானம்

தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களிடம் நட்டஈடு கோரி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமால் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேபொட ஆகியோரிடம் நட்டஈடு கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இன, மத சீர்குலைவை ஏற்படுத்தும், வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாகக் கூறி, பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாட்சிய விசாரணைகளின் அடிப்படையில் அசாத் சாலியை குற்றமற்றவராகக் கருதி கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles