நாடளாவிய ரீதியில் அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு சுபோதினி அறிக்கையின் படி மூன்றில் இரண்டு பங்கு (2ஃ3) சம்பள நிலுவையை வழங்க கோரி (12.06.2024) மாலை வலப்பனை வலய பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் இராகலை நகரில் பேரணியாக சென்று கவன ஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடித்து கொண்டு மாலை 2.30 மணிக்கு மேல் வீதிக்கு இறங்கிய அதிபர், ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி இராகலை நகரில் அரசாங்கத்திற்கும்,கல்வி அமைச்சுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது
*மூன்றில் இரண்டை வழங்கு,
* கல்வி சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு கொடு,
*ஏமாற்றுக் கல்விக் கொள்கையை கிழித்தெறியப்பட்டன,
*கல்வியில் தனியாரை திணிக்காதே,
*சம கல்வியை நிலை நாட்டு,
* கல்வி உபகரணங்களின் விலையை குறைத்திடு,
* அதிபர் சீராக்கல் படியை வழங்கிடு,
*ஆசிரியரின் உதவி தொகையை உடனே கொடு,
* பொது சொத்துக்களை விற்காதே,
*கல்விக்கு ஆறு வீதம் ஒதுக்கு, போன்ற வாசகங்களை பதாகைகளில் எழுதியவாறு கோஷங்களை ஓங்க ஒலித்து போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-ஆ.ரமேஸ்-