“அரசியலுக்காக தமிழ் மக்களை நாம் ஏமாற்றவில்லை”

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்தபோதிலும் மாற்று தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், அரசியலுக்காக தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்கு கிடையாது எனவும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம்மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுவந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை. எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.

13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்விகண்டதொரு பொறிமுறையாகும். நானும் மாகாணசபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்கு பதிலாக அதன்மூலம் நிர்வாக பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.

13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாதபோதிலும், அது வெள்ளை யானையாக கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர்.எனவே, இதற்கு மாற்று தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13 ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

13 ஆவது திருத்தச்சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னர், அதனை குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சமூகமாக வாழ முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles