‘அரச பெருந்தோட்டங்களில் இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை’

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் இழுப்பறி நிலையை சந்திக்கும் என்று ஜே.வி.பியின்  யாழ்.மாட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (15.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அதாவது எமது கடலில் உள்ள அனைத்து வளங்களையும் அள்ளிச் செல்லும் அளவுக்கு அவர்களின் ஆக்கிரமிப்பு உள்ளது. எதிர்காலத்தில் எமக்கு கடல் வளம் அற்று போகும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை அழித்தும் சூறையாடியும் வருகின்றனர். நாம் இந்த மீனவர் பிரச்சினை சம்பந்தமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்தித்து பேசியுள்ளோம். இதன்போது இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை தீர்வை வழங்காமையால் வடக்கு மீனர்கள் அனாதரவாக்கப்பட்டுள்ளனர்.

இப்போது முன்பைவிட மோசமாக இந்திய மீனவர்கள் இத்துமீறும் நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையில் இந்தியா இரட்டை வேடம் பூண்டுள்ளது. விசேடமாக தமிழக அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் நிலையுள்ளது. ஆகவே இவ்வாறு செயற்பட வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை என்பது சுயாதீனமாடு என்றவகையில் எமது கடற்பரப்;பை கொள்ளையடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். எனவே ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் எமது கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.’

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

‘1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. சித்திரை புத்தாண்டை கொண்டாட முடியாத ஒரு துர்பாக்கிய நிலையே தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆயிரம் ரூபாவுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இன்றும் சிலர் 1000 ரூபாவுக்கு வேட்டு வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஆயிரம் ரூபா அதிகரிகரிப்பை அரசாங்கம் முதலில் அரச தோட்டங்களில் வழங்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் இழுப்பறி நிலையை அதாவது பின்னடைவை சந்திப்பதை தவிர்க்க முடியாது. ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களும் இன்று மன விரகத்தியில் உள்ளனர்.’ என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles