” அறவழியில் சமுகநீதிக்காக போராடிமடிந்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவேண்டும். மாறாக நினைவேந்தல் நிகழ்வுகளை முடக்க முற்பட்டால் அது எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
திலீபன் உட்பட தியாகிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கும், சாதகமான தீர்வு கிடைக்காதப்பட்சத்தில் அறவழிபோராட்டங்கள்மூலம் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் வடக்கிலுள்ள தமிழக்கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்னவென்று அக்கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமாரிடம் வினவியபோது,
” சமுக நீதிக்காக மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் போராடியே தீலிபன் உயிர் தியாகம் செய்தார். அறவழியிலான விடுதலைப்போராட்டத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். எனவே, அவருக்கான நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.
அத்தகைய நிகழ்வுக்கு தடைவிதிப்பதானது மீண்டும் குரோத மனப்பான்மையையே மக்கள் மத்தியில் உருவாக்கும். சமாதானம், அமைதி என்பதெல்லாம் காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் இணைந்துவிடும்.
தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் என்பதே எமது கூட்டணியின் நிலைப்பாடாகும். இதன்காரணமாகவே ‘ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்’ அமைப்பதற்கான அழைப்பை எமது தலைவர் மனோ கணேசன் 8 ஆவது நாடாளுமன்றத்திலேயே விடுத்திருந்தார்.எனினும், அதற்கு தமிழ்த் தலைமைகள் சாதகமான பதிலை வழங்கவில்லை. ஆனாலும் தற்போது கூட்டு பயணம், ஒற்றுமையின் முக்கியத்துவம், அவசியத்தும் உணரப்பட்டுள்ளன. மக்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு நாமும் தயார். ” – என்றார்.
அதேவேளை, தியாகி திலீபனை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும், தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது வரவேற்ககூடிய விடயம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.