பலாங்கொடை விகிலிய அல்தொரவத்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குடிநீர் பிரச்சினையால் பெரும் இன்னல்களை அனுபவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.
சுமார் 300ற்கும் அதிகமான குடும்பங்கள் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தோட்டப் பகுதியில் நிர்மாணித்து இருந்த கிணற்றின் மூலம் மக்கள் குடிநீரை பெற்று வந்த போதிலும் குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் அந்த கிணற்று நீர் போதுமானதாக இல்லை என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.
கிணற்றில் உள்ள நீர் குடிப்பதற்கு போதுமானதாக இல்லாமையினால் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று நீரைப் பெற்று வர வேண்டிய கஷ்டமான நிலைமை உருவாகி உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டப் பகுதியில் வசிக்கும் கே பழனியாண்டி(55) என்ற தொழிலாளி கருத்து தெரிவிக்கையில் ஆரம்ப காலத்தில் இந்த தோட்டத்தில் அதிகமான குடும்பங்கள் இருக்கவில்லை. எனினும் தற்பொழுது குடும்பங்கள் அதிகரித்துள்ளன. எனவே இந்த கிணற்றின் நீர் போதுமானதாக இல்லை. கிணற்றிலிருந்து மூன்று குடம் நீரை பெற்றவுடன் கிணற்று நீர் வற்றி விடுகின்றது.
கூலி வேலை செய்யும் நாம் குடிநீரைப் பெற சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி எமக்கு குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.
இது சம்பந்தமாக பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பேமசிரியிடம் வினவிய போது பலாங்கொடை பிரதேச சபை எல்லைப் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ள கிராமப் பகுதிகளை எதிர்வரும் காலங்களில் இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பலாங்கொட நிருபர்