பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு என்பது தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. இன்று நடைபெற்ற சந்திப்பில்கூட உறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டம் சம்பள நிர்ணய சபையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவரும் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும் கலந்துகொண்டிருந்தனர். பெருந்தோட்ட நிறுவனங்களின் சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்துகொண்டதால் முடிவு எதுவுமின்றி கூட்டம் பிற்போடப்பட்டது என தொழிற்சங்க பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
” பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவர் மாத்திரமே வருகை தந்ததால், பேச்சுவார்த்தையை காலம் கடத்த வேண்டிய தேவை சம்பள நிர்ணய சபைக்கு ஏற்பட்டது.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.
சகல அதிகாரங்கள் கொண்ட அரசாங்கத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.