மேல், சப்ரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வட மாகாணத்திலும், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல்தாக்கங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக்காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவுக்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் அயாகம, எலபாத்த, கலவான, கொலொன்ன, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹல பிரதேச செயலகப்பிரிவுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி, நுவரெலிய, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப்பிரிவுகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்கள் மண்மேடு சரிதல், கற்பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறங்குதல், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.