ஆஸி. அணிக்கு எதிராக 100 சிக்ஸர்கள் – ரோகித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலி கிரிக்கெட் அணிக்கு எதிராக 100 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் முதல் நாளில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து இன்று 2வது நாள் நடந்த ஆட்டத்தில் 105.4 ஓவர்களில் ஆஸி. அணி 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடினர்.

இந்த போட்டியில் 16ஆவது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர், அவருக்கு வரலாறு படைக்க உதவியது.

அதாவது சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

அவர் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 63 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதுவே, 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்ஸர்கள் ஆகும்.

இதுதவிர வேறு சில வரலாற்று சாதனைகளையும் ரோகித் படைத்துள்ளார். அவர் இன்று அடித்த சிக்ஸரால், மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது. கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

அவரது இந்த சிக்ஸருக்கு பின்னர், கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (476) ஆகியோர் ரோகித்துக்கு முன்னாள் அடுத்தடுத்து உள்ளனர்.

எனினும், ஒற்றை அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரோகித் முதல் இடத்தில் இல்லை. ஏனெனில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கெய்ல் அனைத்து நிலைகளிலும் சேர்த்து 140 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

இந்த போட்டியில் ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து கொடுத்து ரோகித் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

Related Articles

Latest Articles