இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காளி!

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

இதன்போது, ‘ இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளன.

ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை உள்ளது.” – என்று குறிப்பிட்டார்.

இந்தியா இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. மேலும், மிக விரைவில் அது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது.
இந்தியாவில், பாதுகாப்பு, விண்வெளி போன்ற முக்கியமான துறைகள் ஏற்கனவே தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டுள்ளன.

இப்போது நாங்கள் அணுசக்தித் துறையையும் திறந்து விடுகிறோம். இந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாடு உள்ளது.

உலகம் இன்று இந்தியாவை வெறுமனே பார்க்கவில்லை, இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை உலகம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், பாராட்டவும் செய்துள்ளது.” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles