இரத்தினபுரி, ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியொருவர்மீது குறித்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதொகாவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும், உப தலைவருமான ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
சுப்ரமணியம் ராஜலிங்கம் என்பவர்மீதே இன்று காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான ஓய்வுப் பெற்ற தோட்டத் தொழிலாளர் தற்போது கொலொன்ன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
“ இது தொடர்பில் அவரது மகள் மற்றும பிரதேச மக்கள் எனக்கு தெரிவித்ததையடுத்து, இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கையெடுக்குமாறு இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்தினேன்.” என்றும் ரூபன் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
“ இரத்தினபுரி மாவட்டத்தின் சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், தோட்ட முகாமைத்துவங்களுக்கும் இடையில் காணப்படும் நட்புறவினை பயன்படுத்தி தோட்ட அதிகாரிகள் பெருந்தோட்ட மக்களை தாக்கும் கலாச்சாரத்தினை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கேட்டுக்கொண்டேன்.” -எனவும்; ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
காணி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
