இலங்கையின் சட்டத்தை ஏற்கமுடியாதவர்களை நாடு கடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல்போய்விடும் என்ற அச்சத்தால், 17 அடிப்படைவாத, இனவாத முஸ்லிம் உறுப்பினர்களின் உத்தரவுக்கு பணிந்து என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க அன்று நடவடிக்கை எடுத்தார்.
ரிஷாட் பதியுதீன், அஸாத் சாலி, ஹிஸ்புல்லா, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரே அடிப்படைவாதிகளை வழிநடத்தி, தீவிரவாதிகளை பாதுகாப்பதற்கு முயன்றனர் என்ற விடயத்தை நான் தற்போதும் கூறுகின்றேன். இது தொடர்பில் ஏன் பொலிஸாரால் விசாரணை நடத்த முடியாது?
நாம் ஷரிஆ சட்டத்துக்குதான் (அரேபிய சட்டம்) கட்டுப்படுவோம் என கூறுகின்றனர். உள்நாட்டு சட்டத்தை மதிக்காதவர்களை நாட்டில் வைத்திருக்க முடியாது. சர்வதேச சட்டத்திலும் இவ்விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்நாட்டின் சட்டத்தை ஏற்கமுடியாது என எவராவது கூறுவார்களாயின் அவர்களை நாடு கடத்த வேண்டும். அதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும்” – என்றார்.
