இலங்கை அணி வெற்றிநடை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, மறுமுனையில் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கோஹ்லி 14 ரன்களிலும், ஷிவம் துபே மற்றும் கே.எல். ராகுல் டக் அவுட்டிலும், ஐயர் 7 ரன்களிலும் வாண்டர்சே சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக வீழ்த்திய வாண்டர்சே 6 விக்கெட்டுகளை அள்ளினார். இருப்பினும் அக்சர் படேல் தனி ஆளாக போராடினார். ஆனால் அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவரும் 44 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கனவு முடிவுக்கு வந்தது. இந்திய அணியின் இறுதி கட்ட விக்கெட்டுகளை அசலன்கா வீழ்த்தினார்.

முடிவில் வெறும் 42.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் வாண்டர்சே 6 விக்கெட்டுகளும், அசலங்க 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டி சமனில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles