” இலங்கை வங்குரோத்தடையும் என்ற எதிரணிகளின் விமர்சனங்களானவை வெறும் பகல் கனவாகும். அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பை அரசு உரிய வகையில் முகாமை செய்யும்.” -என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று நிலைமையிலிருந்து மீளும்வரை இந்த பிரச்சினையையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும். இது பற்றி மக்களும் சிந்திக்க வேண்டும்.
பொருட்களின் விலை உயர்வென்பது அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பான விடயமாகும். எனவே, அது தொடர்பான முடிவை எவரும் விரும்பி எடுப்பதில்லை. விரும்பாவிட்டாலும் அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை என்பதாலேயே விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிரணிகள் கூறுவதுபோல நாடு வங்குரோத்தடையாது. அது சஜித் , அநுர போன்றவர்களின் பகற் கனவாகும். ” – என்றார்.