மலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடும் பெருமையோடும் தோன்றிய ஒரு வரலாற்று சாதனையாளர் அமரர் அருள்சாமியின் 61ஆவது ஜனன தினம் (21.09.2020) இன்றாகும்.
1959ம் ஆண்டு தலவாக்கலையில் பிறந்த அவர் ஆரம்ப கல்வியையும் – உயர் கல்வியையும் தலவாக்கலை புனித பெற்றிக் கல்லூரியில்; பயின்று தனது கல்வியை நிறைவு செய்து கொண்டார்.
நீண்டகாலம் தொழிற்சங்க அனுபவமும் நிர்வாகத்திறனும் வாய்ந்தவர் அமரர் எஸ். அருள்சாமி. மலையக தொழிற்சங்க வரலாறு பற்றி பேசும் போது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தோழோடு தோல்நின்று செயற்பட்டவர்களில் அமரர் அருள்சாமி முக்கியமானவர்.
அவர் இ.தொ.காவில் உதவி மாவட்ட பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, தொழிலுறவு அதிகாரியாக, பிராந்திய இயக்குனராக, உபதலைவராக பல வருடங்கள் பணியாற்றியவர். அக்காலங்களில் தொழிற்சங்க பிணக்குகளையும் பிரச்சினைகளையும் அவர் கையாண்ட விதம் இ.தொ.காவுக்கு பெருமை சேர்த்ததாகவே விளங்கியது.
தனது 16ஆவது வயதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட அவர் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் தொழிற்சங்க பிதாமகன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் தலைமையில் தொழிற்சங்க பயணத்தை ஆரம்பித்தார். அரசியல், தொழிற்சங்கம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த அமரர் அருள்சாமி 80களில் சர்வதேச மகாநாடுகளிலும் கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை சாதித்து காட்டினார்.
மிகவும் நிதானமிக்கவர் அவர். அமைதியான தோற்றமும் ஆழமான சிந்தனை உணர்வும் கொண்டவர். தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கருத்துணர்ந்து எதனையுமே ஆக்கப்பூர்வமாக கையாள்வதில் சமர்த்தராக காணப்பட்டார். தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இயங்கியவர் அருள்சாமி. தேசிய அரசியலில் பிரகாசித்த தலைவராக இருந்த அவர் பேச்சாளர், செயல்வீரர் என போற்றப்பட்டவர்.
மத்திய மாகாணசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் தமிழ் கல்வி அமைச்சராகவும் இருந்ததுடன் பல்வேறு சமூக அமைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
தமிழ் கல்வி அமைச்சராக மத்திய மாகாணத்தில் இருந்த பொழுது மலையக கல்வித்துறையில் பல்வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு மலையகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தினார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து 3179 ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், மலையக இலக்கிய வாதிகளை கௌரவிக்கும் முகமாக இரு தடவைகள் மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழாக்களை நடாத்தி கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம்; களம் அமைத்துக் கொடுத்த பெருந்தகை அருள்சாமி. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும் தலைவராகவும் பணியாற்றிய அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் கூட்டிணைப்பு பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மலையகத்தில் கலை கலாச்சார ரீதியாகவும், விளையாட்டுத் துறைகளை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கபூர்மான வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இ.தொ.கா. நடாத்திய தொழிற்சங்க போராட்டங்களில் அவரது பங்களிப்பு பாரிய அளவில் பரிணமித்தது. அவரே பல போராட்டங்களை நெறிப்படுத்தியிருந்தார். அவரது பேச்சு தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதோடு ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்தது.
சுமார் 50 ஆண்டு காலம் அமரர் தொண்டமானோடு பயணித்த அவர் இ.தொ.காவில் இருந்தவரை நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாகவும் செயற்பட்டார். சாதுரியமாகவும் சாந்தமாகவும் எப்பொழுதும் காணப்பட்ட அவர் 59வது வயது வரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவராக இருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களின் சமூக அரசியல் துறைகளில் மாற்றம் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அவரது இழப்பு மலையக சமூகத்திற்கு மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இன்நாளில் இவரது ஆத்ம சாந்திக்காக நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தேவதாஸ் சவரிமுத்து
இ.தொ.கா. ஊடக இணைப்பாளர்