2022 செப்டம்பர் 24 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77வது அமர்வின்போது இடம்பெற்ற விவாதத்தில் இந்தியா முன்வைத்த அறிக்கையானது ‘வசுதைவ குடும்பகம்’ – என்று கூறப்படும் முழு உலகுமே ஒரு குடும்பம் என்ற புராதனமான இந்தியக் கொள்கையினை பிரதிபலித்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் இந்த அறிக்கையினை சமர்ப்பித்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் , அடுத்துவரும் 25 ஆண்டுகளில் உலக நன்மைக்காக மேலும் பல திறன்களை உருவாக்குவதற்கு இந்தியா உறுதிபூண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதம், பெருநோய் அல்லது சூழல் சார்ந்த சிக்கல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைவு, ஐக்கியம் மற்றும் கூட்டொருமைப்பாடு ஆகியவற்றுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் 700 திட்டப்பணிகள் பசுமையுடனான அபிவிருத்தி, சிறந்த தொடர்புகள், டிஜிட்டல் மயமான விநியோகங்கள் மற்றும் இலகுவான சுகாதார பொறிமுறைகள் ஆகியவற்றின் மீதான அக்கறையினை சுட்டிக்காட்டுகின்றன.
2. இந்தியாவின் பங்காளிகளது முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் பதிலளித்து செயலாற்றும் இந்திய கொள்கையினை மீள உறுதிப்படுத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள சகோதர சகோதரிகளுக்காக இந்தியா தனது ஒத்துழைப்பினை நல்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
100க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியமை இந்த அணுகுமுறையினை பிரதிபலிக்கும் சாட்சியமாக அமைகின்றது. அனர்த்தங்களில் சிக்கிய இந்தியரல்லாத பிறநாட்டவர்களுக்காகவும் இந்தியாவால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
3. இந்தியாவின் அயல் நாடுகளுடனான உறவு தொடர்பாக இச்சந்தர்ப்பத்தில் கருத்துகளை முன்வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை கவலைக்குரிய விடயமெனவும் குறிப்பிட்டார்.
தேசிய ரீதியான குறுகிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அப்பால் சர்வதேச சமூகம் மேலெழ வேண்டுமென அழைப்பு விடுத்திருந்த அவர், முன்னொருபோதும் இல்லாத வகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்தியாவினால் வழங்கப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் அனர்த்தங்களின் போதான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களிலும் தனது அயல்நாடுகளுக்கு இந்தியா வலுவான ஆதரவை வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
4. சமாதானம், பேச்சுக்கள் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றின் மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அக்கறை குறித்தும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், யுத்தங்களோ அல்லது மோதல்களோ நிறைந்த ஒரு யுகம் இது அல்ல என்றும் ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான தருணமே இதுவெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், பயங்கரவாதம் தொடர்பில் பூச்சிய சகிப்புத்தன்மையுடனான இந்தியாவின் அணுகுமுறையையும் அவர் இங்கு வலியுறுத்திக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5. கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 மாநாட்டின் பக்க நிகழ்வில் இயற்கை அன்னைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட LiFE அல்லது சூழலுடன் இசைந்த வாழ்க்கை முறைகள் என்ற திட்டம் தொடர்பாக இங்கு குறிப்பிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர், உலகின் ஆரோக்கியத்திற்காகவும் சூழல் பாதுகாப்பிற்காகவும் ஒன்றிணைந்த மற்றும் நடுநிலையான முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தியிருந்தார்.
6. உலகின் தென்பகுதி எதிர்கொள்ளும் அநீதியான செயற்பாடுகளுக்கு துரிதமான தீர்வுகள் காணப்படவேண்டிய அவசியத்தை இந்த அமர்வில் சுட்டிக்காட்டிய அவர், பாரிய பொறுப்புகளை ஏற்பதற்கு இந்தியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன் மறுசீரமைப்புகளுடனான ஐநா பாதுகாப்பு சபை ஊடான மறுசீரமைக்கப்பட்ட பல்தரப்பு அணுகுமுறைக்கும் அழைப்பு விடுத்தார். இந்த இலக்கிற்காக ஐநா உறுப்புநாடுகள் மத்தியில் கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.