உள்ளாட்சி தேர்தலில் வெல்வோம்: சஜித் சூளுரை!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எதிரணியில் இருந்தபோது விவசாயிகளுக்காக குரல் எழுப்பி, நெல்லுக்கான நிர்ணய விலையை தீர்மானிப்போம், அதனை சட்டமாக்குவோம் என்று பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று அமைச்சர் பதவிகளை வகித்துக் கொண்டு உர மானியமாக 25000 ரூபாயை கூட உரிய நேரத்தில் வழங்க முடியவில்லை.
ஒரு சாராருக்கு 15,000 ரூபா என்றும் மற்றுமொரு சாராருக்கு 10,000 ரூபா என்றும் வழங்கப்பட்டுள்ளதே தவிர 25000 ரூபா இன்னும் மொத்தமாக போய் சேரவில்லை.
நாடு வங்குரோத்து நிலையை எட்டியதோடு நாட்டின் பெரும்பாலான மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சி கண்டன. பலர் வறுமை நிலையை அடைந்தனர். இன்றும் நம் நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான தெளிவான திட்டமொன்று இல்லை. தற்போதைய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பிறகு முறையான திட்டத்தை செயல்படுத்தாது, தற்காலிக நிவாரணங்களை வழங்கி வருகிறது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஏழ்மையை போக்குவதற்கான இலக்குடனான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற சேவைகள் இன்றும் கூட நடந்த பாடில்லை. எனவே நடக்கப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. கிராமத்தை பாதுகாக்கவும் நகரத்தை பாதுகாக்கவும் மக்கள் நம்பிக்கை வைக்கும் திறமையான வேட்பாளர்களை நாம் களமிறக்குவோம். மக்கள் ஆதரவோடு நாம் வெற்றி பெற வழிவகுப்போம். இதனூடாக பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.” -என்றார்.
