‘என் உயிர் பிரியும்வரை மலையக மக்களுக்கான சேவை தொடரும்’ – திகா உருக்கம்

” மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன். இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மகிழ்ச்சி இல்லம் அமைப்பின் நிதி பங்களிப்பில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பழனி திகாம்பரம், சிறப்பு அதிதியாக மயில்வாகனம் உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், முத்தையா ராம், மகிழ்ச்சி இல்லத்தின் முகாமையாளர் பாஸ்டர் பெருமாள் ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” உண்மையை பேச வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், உண்மையாக வாழ வேண்டும் என்பதே எமது பழக்கம். அந்தவகையில் மலையக மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலுக்கு வந்தேன். மாறாக இருப்பவற்றை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அல்ல.

எமது பெருந்தோட்ட மக்களை ஒரு சில அரசியல் தலைமைகள் லயத்தில்தான் வாழ வைத்தனர். ஆனால் எனக்கு அமைச்சு பதவி கிடைக்கப்பெற்று குறுகிய காலப்பகுதியிலேயே தனி வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றளவிலும் அத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அமைச்சு பதவியை சரியாக பயன்படுத்தி, மக்களுக்கு சேவை செய்தேன். அதனால்தான் புதிய சின்னத்தில் போட்டியிட்டபோதும்கூட 83 ஆயிரம் மக்கள் எனக்கு வாக்களித்தனர். இனியும் எனது உயிர் இருக்கும்வரை மக்களுக்கு சேவை செய்வேன்.

நாட்டிலே தற்போது பொருளாதாரப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. இதற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல. இந்த அரசின் முறையற்ற தீர்மானங்களை பிரதான காரணங்களாகும். எனவே, நாட்டுக்கும் , எமது மலையக மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி வரவேண்டும். சஜித் தலைமையிலான அமைச்சரவையில் நானும் அமைச்சராக இருப்பேன். எமது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles