அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்பொழுது எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது .இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் இந்த அரசாங்கம் அடித்துவிட்டது. இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று எமது நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாலுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.இதன் காரணமாக எங்களுடைய மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருப்பதானது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாகவே இருக்கின்றது.
இந்த எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக எங்களுடைய பெருந்தோட்ட தொழிலார்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.காரணம் இன்றும் பல பெருந்தோட்ட பகுதிகளில் மண்ணெண்னையையே அதிகமாக எங்களுடைய மக்கள் பாவித்து வருகின்றார்கள்.இந்த விலையேற்றத்தை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
இந்த எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக பாண் உட்பட பேக்கறி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது.இது சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும்.
அது மட்டுமல்லாமல் முச்சக்கர வண்டி ஒட்டுனர்களின் நிலைமை இன்னும் பரிதாபமான ஒரு நிலைக்கு சென்றுவிடும்.அவர்களுடைய தொழிலை செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் விலையேற்றம் இன்னும் பாதிப்பையும் சாதாரண மக்களிடம் அதிக கட்டணத்தையும் அறிவிட வேண்டிய நிலைமை ஏற்படும்.
போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கும்.ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.இப்பொழுது இருக்கின்ற விலைகளையே பொது மக்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.இதில் இன்னும் விலையேற்றம் ஏற்பட்டால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
விலேயேற்றம் பிழையானது என மொட்டு கட்சியின் செயலாளரே கருத்து வெளியிட்டுள்ளார்.அப்படியானால் இது யாருடைய வழிகாட்டலில் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் ஏழைகளின் தோழனாக இருக்க வேண்டும்.அப்படி இரந்தவர்தான முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்ஹ பிரேமதாச.அவர் மறைந்தாலும் அவருடைய சேவைகளை இன்றும் மக்கள் மறக்கவில்லை.அதற்கு காரணம் அவர் ஏழைகளின் பங்காளனாக இருந்தவர்.
அதே போல இந்தியாவின் தமிழ்நாட்டிலும் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஏழைகளுக்காக பாடுப்பட்டவர்.எனவே ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்ற எந்த அரசாங்கமும் ஆட்சியில் நிலைத்திருக்க முடியாது.இந்த அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.