” எனக்கு எதிராக அல்ல கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்கும் முடிவை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்திருந்தது. எனினும், வாக்கெடுப்பில் பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி, யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பௌசி,
” சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நான்தான் முதலில் கூறினேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். எனினும், நாடு மற்றும் இளைஞர்களின் நலன்கருதி வாக்களிக்காமல் அவர் சென்றுவிட்டார். எனினும், நாட்டின் நலன்கருதி அதனை நான் ஆதரித்தேன். ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பயன் இல்லை.” – என்றார்.