ஐ.தே.கவுக்கு புதிய யாப்பா – பொது மக்களிடமிருந்து யோசனை பெற திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய யாப்பொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய யாப்பை சட்டமூலமாக்குவதற்கு கட்சியின் நிறைவேற்றுச் சபையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழுவின் பரிந்துரைக்கமையவே புதிய யாப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களும் யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

மேற்படி குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பனவும் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்காரவும் ஏனைய அங்கத்தவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான தயா பெல்பொல மற்றும் ரோலண்ட் பெரேரா ஆகியோரும் செயற்படுகின்றனர். அதற்கிணங்க புதிய யாப்பு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுத்தருமாறு கட்சியானது அனைத்து செயற்குழுவின் அங்கத்தவர்களுக்கும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரம்கொண்ட பிரதிநிதிகளுக்கும் கட்சியின் அமைப்பாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. புதிய யாப்பு தயாரிப்பை தொடர்ந்து கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பதாக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் சட்டப்பிரிவில் ஒப்படைக்குமாறும் குழுவின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles