டொலர் நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு எரிபொருள், உணவுப் பொருட்களை விநியோக முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது.
இந்த நிலையில், போராட்டங்களைக் களைக்கப் பயன்படுத்தப்படும் அதி நவீன தண்ணீரை அதிவேகமாக பீச்சி அடிக்கும் நீர்ப் பீரங்கி வாகனம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக அண்மையில் இந்த வாகனம் இலங்கைக்கு தருவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
குறித்த வாகனம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரால் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு என்ற அமைச்சுப் பதவியில் இருக்கும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதனை அமைதி காக்கும் பணிகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வாகனம் இந்தியாவில் இருந்து இந்திய கடன் சலுகைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது எனவும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
எனினும், இந்தச் செய்தியில் உண்மையில்லை என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கூறுவதைப் போல ஒரு வருடத்திற்கு முன்னதாக கொண்டுவரப்பட்டிருந்தால், அந்தக் கூற்றிலும் சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக கொவிட் நெருக்கடியினால் பால்மா, சீனி ஆகியவற்றுக்கு ஒருவருடத்திற்கு முன்பிருந்தே தட்டுப்பாடுகள் நிலவின.
அத்துடன் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நெருக்கடியான நிலையில், இவ்வாறான வாகனம் ஒன்று ஏன் தருவிக்கப்பட்டது என்ற கேள்விக்கு அமைச்சர் விடையளிக்க மறுத்துள்ளார்.










