‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்!

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்த ராஜா ஆகியோர் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் வண்ணம் ஒரே நாடு – ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயதானத்தினை, ஆராய்ந்து சட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய சிபாரிசுகளை முன்வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்தச் செயலணி நியமிக்கப்பட்டது.

13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படாமை அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததுடன், பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, குறித்த செயலணிக்கு புதிதாக மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செயலணியின் அங்கத்துவ அமைப்பு மற்றும் விடய நிர்ணயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பிரதிநிதித்துவங்களை கருத்திற் கொண்டு இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles