” மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளை மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடியதோடு, ஒலுவில் துறைமுகம் பாவனைக்கு உகந்தாக இல்லாத துர்ப்பாக்கிய நிலையில், அதன் நுழைவாயில் பிரதேசத்தைச் சூழ மணல் மேடு குவிவதாலும், கடலரிப்பு காரணமாக அயல் கிராமங்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாலும், அலைத் தடுப்புச் சுவரின் தவறான நிர்மாணம் காரணமான சீர்கேடுகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பிலும் அவரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளையும் மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இவை தொடர்பில் மீன்பிடித் துறை அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக ஆலோசகர் ரகேஷ் பாண்டே, துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தையொன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும் என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.










