ஓராண்டுக்குள் புதிய அரசமைப்பு! நிபுணர் குழுவுக்கு ஆறு மாதகாலம் அவகாசம்!!

புதிய அரசியலமைப்பு ஓராண்டு காலப்பகுதிக்குள் இயற்றப்படும். நிபுணர்குழுவுக்கு தனது அறிக்கையை முன்வைப்பதற்கு ஆறு மாதகால அவகாசமே வழங்கப்படும்.” – என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான கால எல்லை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

நிபுணர் குழுவின் பணி, வரைவு நகலை முன்வைப்பதற்கான கால எல்லை, அவர்களுக்கான அலுவலகம், பட்ஜட் உள்ளிட்ட விடயங்கள் பட்டியலிடப்பட்டு உரிய வகையிலேயே பொறுப்பு கையளிக்கப்படும்.

இதன்படி வரைவு நகலை முன்வைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் நிபுணர் குழுவுக்கு ஆறு மாதங்களை வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். புதிய அரசியலமைப்பை இயற்றி முடிக்கும் பணியை ஓராண்டுக்குள் பூர்த்தி செய்வதே எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

1970 ஆம் ஆண்டு ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு நாட்டில் பெரும்பான்மை பலம் கிடைத்தது. 1977 இல் அவர் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 1994 இலேயே வரக்கூடியதாக இருந்தது.

1977 இல் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் கிடைத்தது. இனி எப்போதும் தனது கட்சி தோற்காது என நம்பினார். 82 இல் தேர்தலைக்கூட நடத்தவில்லை. 94 இல் ஐ.தே.க.தோல்வியடைந்த பின்னர் அக்கட்சியால் இன்றுவரை ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்ய முடியாமல் உள்ளது. கட்சிகூட இன்று படுதோல்வியடைந்துள்ளது.

2010 இல் எமது அரசாங்கத்துக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. எனினும், 2015 இல் தோல்வி ஏற்பட்டது. எனவே, வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே ஜனநாயக அம்சமும்கூட. எப்படியான பெரும்பான்மை கிடைத்தாலும் அதனை உரிய வகையில் முகாமை செய்து, மக்களுக்கு தேவையானவற்றை செய்யாவிட்டால் அன்று எற்பட்ட நிலையே மீண்டும் ஏற்படும்.

Related Articles

Latest Articles