மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அரசியலுக்காக கூட்டு ஒப்பந்த விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உபதலைவருமான பெரியசாமி பிரதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,..
எங்களை போன்ற கட்சிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் இந்த கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்று வலியுறுத்தினோம்.கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவதனால் பெருந்தோட்ட மக்களுக்கு தேவையான சலுகைகள் உரிமைகள் இரண்டு தரப்புக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமாக சிநேக பூர்வமாக தாக்கல் செய்யப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தினை மீறுகின்ற பட்சத்தில் தொழிலாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் அங்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு முட்டுகட்டை, பெருந் தோட்ட மக்களை நசுக்கின்ற செயப்பாடு பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. என்றெல்லாம் தெரிவித்தார்கள். பாராளுமன்றத்திலும் இந்த கூட்டு உடன்படிக்கை தகர்த்தெறியப்பட வேண்டும் என்று பல உறுப்பினர்கள் தெரிவித்து வந்தார்கள். அப்போது இந்த மக்கள் தொடர்பான விடயங்கள் அவர்களுடைய கண்ணுக்குத் தெரிவில்லை.
அதற்கு அடுத்த படியாக அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை கோரி பல்வேறு சூழ்ச்சிகள் செய்தார்கள்.
ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்பட்டதன் பின்னர் இந்த கூட்டு ஒப்பந்தம் தகர்த்தப்பட்டது. அதன் பின்னர் இப்போது இந்த பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் இப்போது மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன.அதிக பட்சம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கூட இப்போது கிடைப்பதில்லை.இப்போது மீண்டும் கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என்கிறார்கள்.
மக்களின் வியர்வையிலே பிழைத்துள்ள நீங்கள் இரட்டை வேடம் போடாது அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுவதன் மூலம் தான் மக்களுக்கு நன்மை செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
