உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் இன்று 17ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையினால் பல்வேறு சமூகநல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குள் வசிக்கும், பார்வைக் குறைபாடு காரணமாக அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.
இதன்போது, தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது பார்வைக் குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், பரிசோதனையின் போது மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட சிலருக்கு மேலதிக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக வழங்கும் வகையில் இந்த சமூகநல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் ராஜவீரன்,ஆளும்கட்சியின் உபதலைவி யாகுலமேரி உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










