90 சதவீதம் பெருந்தோட்ட மாணவர்களை உள்ளடக்கிய கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2022 (2023) சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து 83 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.
ஐந்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபர் இரா சிவலிங்கம் இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொட்டகலை தமிழ் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 1931 ஆண்டு வூட்டன் தோட்டத்தில் ஒரு தோட்டப் பாடசாலையாக உதயமானது. ஆனால் மலையகத்தில் இன்று ஒரு பெயர் சொல்லக்கூடிய ஒரு பாடசாலையாக வளர்ச்சி பெற்றுள்ளது.
இப்பாடசாலையில் தற்போது 2, 300 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 92 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இதில் 90 சதவீதமான மாணவர்கள் தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் , அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றில் 50 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருந்தனர்.
கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 02 இடத்தினை பெற்றிருக்கின்றது. தொழிநுட்ப ஆய்வு கூட வசதிகள் இல்லாத நிலையில் குறித்த துறையில் ஈடெக் பிரிவில் 10 ஆவது இடத்தினை பாடசாலை பெற்றுள்ளது.
உயரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.
அண்மையில் வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலும் 34 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலாக பெற்று சித்தி பெற்றிருந்தனர்.
கடந்த முறையைவிடவும் இம்முறை சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக உள்ளன. 8 பாடங்களில் நூறு சதவீத பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது” – என்றார்.
மலைவாஞ்ஞன்










