கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தில் 2 வயது சிறுவன் ஒருவருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த சிறுவன் அவரின் தாயாருடன் மாத்தறை கம்புறுகமுவ கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தச் சேர்ந்த ஆணொருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவரின் மகனே குறித்த 2 வயது சிறுவனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் திகதி குறித்த நபர் ராணியப்பு தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.இதனையடுத்து அவர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் கடந்த 18 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை 19 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த சிறார்களிடம் நேற்று பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அதில் அவரின் 2 வயது மகனுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.