‘கொரோனாவால் 168 மில்லியன் மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை’

உலகம் முழுவதும் 168 மில்லியன் சிறார்கள் ஓராண்டாக பாடசாலைக்கு செல்லவில்லை என்று ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. அப்போது முதலே பாடசாலைகள் மூடப்பட்டன. எனினும் பின்னர் ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது பல நாடுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விலக்கி, பாடசாலைகள் திறந்தாலும் முழு அளவில் கல்விக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதாவது அனைத்து மாணவ-மாணவிகளும் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் உருவாகவில்லை.

இவ்வாறு பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை ஐ.நா. அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதில் 168 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த சுமார் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

இதைப்போல உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பள்ளிகள் மூடலால் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமாக 14 நாடுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலும் பள்ளிகள் மூடியே உள்ளன.

Related Articles

Latest Articles