இலங்கையில் கடந்த 23 ஆம் திகதி முதல் நேற்றுவரையான 14 நாட்களுக்குள் 6 ஆயிரத்து 283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 16 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று (5) குணமடைந்தனர்.
அதேவேளை, இலங்கையில் 2ஆவது அலைமூலம் நேற்றுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 7 ஆயிரத்து 48 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மினுவாங்கொட கொத்தணிமூலம் வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 2ஆயிரத்து 788 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 316 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 774 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
