கொரோனா கோரத் தாண்டவம் – 24 மணி நேரத்தில் 16 ஆயிரம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து 792 பேரும், இங்கிலாந்தில் 1 ஆயிரத்து 564 பேரும், பிரேசிலில் 1 ஆயிரத்து 283 பேரும், ஜெர்மனியில் 1 ஆயிரத்து 201 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து 6 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 85 ஆயிரத்து 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles