கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் இடம்பெறவுள்ளன.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியை போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளிலிருந்து 69 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் தனி கட்சியாக தேசிய மக்கள் சக்தியிலிருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைத்துள்ளதால் தாமே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாக ஆளுங்கட்சி தெரிவித்து வருகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், கூட்டணியமைத்து பெரும்பான்மையை உறுதிப்படுத்தி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேட்சை குழுக்களுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையிலேயே இவ்வாரமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
