‘கொவிட்-19 தொற்றை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளது’ – சீனா பாராட்டு!

” சீனா கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை உலக சுகாதார அமைப்பிற்கு தொடர்ந்து வழங்கும். இலங்கை கொவிட்-19 தொற்றை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது.”

இவ்வாறு  சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அலரிமாளிகையில் இன்று (9) நடைபெற்ற சந்திப்பின்போதே சீன பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் போது பெற்றுக் கொண்ட வெற்றி சீனாவிற்கு போன்றே இலங்கைக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டிய யெங் ஜியேச்சி  , அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஊக்குவிப்புகளை சீன அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட ஏனைய திட்டங்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்பு ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக அந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் என நாம் நம்புகின்றோம். சீனா, இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளின் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தமது இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் விரிவடையும் என நம்புவதாகவும், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோர் ஒன்றிணைந்து இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதன் ஊடாக பொருளாதார ஒத்துழைப்புடன் இரு நாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேலும் விரிவடையும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் உரை……

அதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச,

” உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இச்சுற்றுப்பயணத்தின் ஊடாக தற்போதுள்ள இருதரப்பு உறவை மீண்டும் உறுதிபடுத்துவதற்கு இலங்கைக்கும், சீனாவிற்கும் சாத்தியமாகியுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியமை குறித்து சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கொவிட்-19 தொற்று நிலைமைக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள் எழுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சீன அரசாங்கத்துடனான எமது நீண்ட கால நட்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கொவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர், அரசாங்கம் உலகளாவிய ரீதியில் முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன்,  அதில் கொழும்பு துறைமுக நகரத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இலங்கைக்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், அது ஏற்றுமதி வருவாயை உருவாக்குவதுடன், இலங்கையர்கள் விசேடமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவியாக அமையும்.” – என்றும் பிரதமர் கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பவித்ரா வன்னிஆராச்சி,

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles